காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை கடந்த பிப்ரவரி 16-ம் தேதி வெளியிட்டது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் என்கிற வார்த்தைகள் இல்லை என்றும் ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) உருவாக்கவே கூறப்பட்டிருக்கிறது என்றும் கர்நாடகாவும் மத்திய நீர்வளத்துறையும் கூறி வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 6 வார அவகாசத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மார்ச் 29-ம் தேதியுடன் அந்த அவகாசம் முடிந்துவிட்டது.
இதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் போராட்டங்களை அறிவித்து உள்ளன. திமுக சார்பில் நாளை (ஏப்ரல் 1) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் போராட்டத் திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. பாமக சார்பில் ஏப்ரல் 11-ம் தேதி பந்த் அறிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான அதிமுக சார்பில் ஏப்ரல் 3ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடைபெறும் என இபிஎஸ், ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நிதிமன்றம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருவாய் மாவட்டம் வாரியாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்குத் தலைமையேற்போர் பட்டியலை துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், 3.4.2018 - செவ்வாய்க் கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.