அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் முறைகேடு வழக்கில், அரசுத்தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பல்டி அடித்த நிலையில், நீதிமன்றத்துக்கு உதவி செய்ய அனுமதி கோரி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2006-11 தி.மு.க ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.37 லட்சத்திற்கும் மேலான அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம சிகாமணி எம்.பி., கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாத், ராஜமகேந்திரன் ஆகிய 6 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் நேற்று புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கவுதம சிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆகிய இருவருக்கும் குத்தகைக்கு நிலம் கொடுத்ததாகவும், ஆனால் இவ்வழக்கு சம்பந்தமாக தனக்கு வேறு எதுவும் தெரியாது என்று கூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார்.
கடந்த வாரம் ஓய்வு பெற்ற கனிமவளத்துறை இயக்குனர் பிறழ் சாட்சியம் அளித்தார். இதுவரை இவ்வழக்கில் 11 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், அதில் 9 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் இவ்வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என்று கோரி விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயக்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதால், உண்மையை வெளிக்கொண்டுவர தன்னையும் இந்த வழக்கில் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க காய் நகர்த்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“