தி.மு.க அரசு அவசர கோலத்தில் வடிகால் பணிகளை செய்ததால் தான், குறைவான மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. எப்போதும்போல் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக மழைப்பொழிவை எதிர்க் கொண்டு வருகின்றன. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியின் உள்ளாட்சி நிர்வாகம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் விரைவாகச் செயல்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின் வருகை: சிதைந்த சீர்காழி சீராகுமா?
இந்தநிலையில், சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முகலிவாக்கம், மணப்பாக்கம், மதனந்தபுரம் ஆகிய பகுதிகளை இ.பி.எஸ் பார்வையிட்டார். இந்தப் பகுதிகளில் கடந்த 3 மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கியதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. 3 நாட்களாக மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதிகளை இ.பி.எஸ் பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இ.பி.எஸ், மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை அனுப்பி, மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை இப்போது தான் ஆரம்பித்துள்ளது. குறைந்த அளவே மழை பெய்துள்ளது.
அ.தி.மு.க அரசு அறிவித்த டெண்டரை ரத்து செய்துவிட்டு, தி.மு.க அரசு சிங்கார சென்னை 2.0 என்று அறிவித்து, நாங்கள் பெற்ற நிதியை பயன்படுத்தி வருகிறார்கள். தி.மு.க அரசு அவசர கோலத்தில் வடிகால் பணிகளை செய்ததால் தான், குறைவான மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது. நாங்கள் பெற்ற நிதியில் தான் தற்போது வடிகால் பணிகள் நடந்து வருகிறது. அதனையும் சரியாக செய்யவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தப்பிறகு சிறப்பாக செயல்படுவதாக காட்ட ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தப்போது, சென்னை மாநகராட்சியில் எந்த பணியையும் செய்யவில்லை. நாங்கள் ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட நிதி ஆதாரங்களில் நிதியைப் பெற்று 1400க்கும் மேற்பட்ட கீ.மீட்டருக்கு வடிகால் பணிகளை முடித்து விட்டோம். இப்போது அந்த நிதியில் கூடுதல் பணிகளை செய்து விட்டு, ஏதோ இவர்கள் செய்ததுபோல் காட்டிக் கொள்கிறார்கள்.
அ.தி.மு.க ஆட்சியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதலாக நிவாரணம் அளித்தோம். அதைப்போல் தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
10% இடஒதுக்கீட்டில் விவகாரத்தில் தி.மு.க நாடகமாடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்தப்போது தான் இதற்கான கமிஷன் அமைக்கப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையிலும் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு இ.பி.எஸ் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil