/indian-express-tamil/media/media_files/2025/10/14/sp-velumani-2025-10-14-12-07-57.jpg)
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அப்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை, இந்த விவகாரத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதியை கோரியதாக தெரிவித்தது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிரான ஆவணத்தை மொழிப்பெயர்த்து அனுப்பக் கூறி மத்திய அரசு விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கு விரைவாக நகர்வதில்லை என்றும் மற்றவர்கள் மீதான வழக்கு வந்தே பாரத் ரயில் போன்று வேகமெடுப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தன் மீது எந்த வழக்கும் இல்லை என்று கூற முன்னாள் அமைச்சர் முற்படுவார் என தெரிவித்த நீதிபதி அடுத்தக்கட்ட விசாரணையை அடுத்தமாதம் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.