/indian-express-tamil/media/media_files/2025/05/26/QoL5B3bX5osgrqZeUaHO.jpeg)
கோவை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மழை முன்னேற்பாடுகள் நடவடிக்கை எடுக்கவும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறும்போது;
எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி ஆணையின் படி, கோவை மாவட்டத்தில் இருக்கக் கூடிய அடிப்படை பிரச்சனைகள் குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சனைகள் குறித்தும், அடிப்படை திட்டங்களை நிறைவேற்றக் கோரியும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனு கொடுத்து இருக்கிறோம்.
இதில் குறிப்பாக கோவை மாநகராட்சியில், பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வரிவிதிப்பு, அதே போல மின் கட்டண உயர்வு போன்றவைகள் செய்து இருக்கிறார்கள். மீண்டும் 6% சொத்து வரி உயர்வு, கோவை மாநகராட்சியிலே தனியாக தீர்மானம் போட்டு மூன்று சதவீதம் வரி உயர்வு, அதே போல சொத்துக்களுக்கும், வீடுகளுக்கும் வரி உயர்வு மட்டும் அல்லாமல் அபராத வரி விதிப்பு செய்யப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும்.
அதேபோல கோவை மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோன்றப்பட்ட பள்ளங்கள், குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழிகள் என சாலைகள் பொதுமக்கள் அதிகளவில் நடக்க முடியாத சாலைகளாக இருக்கிறது. உடனடியாக இந்த சாலைகளை செப்பனிட வேண்டும் என சட்டமன்றத்திலே கோரிக்கை வைத்தோம் ஆனால் இன்று வரை அதற்கு யாரும் செவி சாய்க்கவில்லை. தற்போது மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதனால் கிட்டத்தட்ட அனைத்து சாலைகளுமே பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது, அதனால் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும். மழை வரும் நேரத்தில் குளத்திற்கு வரும் வாய்க்கால்களை எல்லாம் முன்னரே தூர்வாரி இருக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் சரியாக செய்யவில்லை. மழை வருகிறது என்று சொன்ன பின்னரே வேலைகள் செய்கிறார்கள். மழை வரும் போது தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
எடப்பாடியார் முதலமைச்சராக இருக்கும் போது, கோவைக்கு அதிகமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் நாங்கள் கொண்டு வந்த சில திட்டங்கள் முடிவடையாமல் உள்ளது, எடப்பாடியார் நிதி ஒதுக்கி தொடங்கிய திட்டங்களையும் இன்னும் முடிக்காமல் வைத்து இருக்கிறார்கள். அதனால் கிடப்பில் இருக்கும் திட்டங்கள் அனைத்தையும் விரைவில் முடிக்க வேண்டும். அதேபோல மேட்டுப்பாளையத்தில் சுற்றுலா சாலை, பைபாஸ் சாலைகள் போன்றவற்றை விரைவில் சரி செய்ய வேண்டும். அதேபோல மழை பெய்து வருவதால் வாழை போன்ற பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் அந்த நிவாரணத்தையும் உரிய முறையில் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு நிவாரணம் போதிய அளவில் வழங்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் யானைகள் தொந்தரவு, காட்டுப் பன்றிகள் தொந்தரவு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உயிர் சேதம் விளைவிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடக்கிறது. அதனால் யானைகளுக்காக தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும், நான் கூட என்னுடைய சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி இருக்கிறேன். அரசாங்கமும் அதற்கு 8 கோடி ஒதுக்குவதாக கூறினார்கள். ஆனால் இன்று வரை எதுவும் செய்யப்படவில்லை. அந்தப் பகுதிகளில் எல்லாம் வனவிலங்குகளால் கடுமையான சேதாரம் நடக்கிறது.
தொண்டாமுத்தூர் உள்பட பல கிராமங்களில் இருக்கக் கூடிய பொதுமக்களுக்கு முக்கியமாக விவசாய பெருங்குடி மக்களுக்கு இருக்ககூடிய பிரச்சனை என்னவென்றால், அவர்களுடைய நிலத்தில் முன் எப்பொழுதும் அவர்களுடைய சொந்த பயன் பாட்டிற்காக மண் எடுத்ததற்கு தற்போது 7 லட்சம் 8 லட்சம் என அபராதம் விதித்து இருக்கிறார்கள். உடனடியாக இந்த வழக்குகளை எல்லாம் ரத்து செய்ய வேண்டும். உண்மையாகவே யார்? மண்ணை எடுத்து விற்கிறார்களோ? அவர்கள் மீது வழக்கு தொடக்க வேண்டும். அப்பாவி விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்து அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும்.
அதேபோல ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அற்புதமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அந்த பகுதிகள் எல்லாம் புற்கள் முளைத்து பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. குளங்கள் அனைத்துமே ஆகாயத் தாமரைகள் முளைத்து மோசமான நிலைமையில் உள்ளது. இவைகளை எல்லாம் நிச்சயம் பராமரிக்க வேண்டும். அதேபோல கூட்டு குடிநீர் திட்டத்தை எடுத்துக் கொண்டால், 370 MLD தண்ணீர் வருகிறது. நமக்கு அவ்வளவு தண்ணீர் தேவையில்லை, ஆனாலும் கூட கிராமப் புறங்களுக்கு தண்ணீர் வருவதே இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது. நகரங்களில் ஐந்து நாள் மட்டுமே தண்ணீர் வருகிறது என குற்றச்சாட்டுகள் இருக்கிறது. குடிநீர் வழங்குவதும் சரியாக இல்லை. இதை சரியான அதிகாரிகள் வைத்து கண்காணிக்க வேண்டும்.
சிறுவாணி குடிநீர் மிகவும் முக்கியம், கேரளா அரசு அடிக்கடி தண்ணீரை நிறுத்தி விடுகிறார்கள். அதற்கு மாவட்டம் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இங்கு இருந்து கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறுகிறார்கள். அந்த கட்டணத்தை செலுத்தி முறையாக நீரை பெற்று தர வேண்டும். அதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல பீளமேடு மயான பிரச்சனையில் அங்கு ஏதோ புதிதாக கட்டிடம் கட்டப்படுவதாக கூறுகிறார்கள். அதை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். கோவை மாநகராட்சியில் சரியாக குப்பைகள் அகற்றப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இதனால் அதிகமான நோய் தொற்று ஏற்படுகிறது. மழைக் காலங்களில் கூட ப்ளீச்சிங் பவுடர்கள் கொட்டப்படுவதில்லை. இது போல், மாநகராட்சியில் எந்த நடவடிக்கையும் எடுப்பதும் இல்லை வேலையும் நடப்பதும் இல்லை.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் மருந்துகள் அடிக்க வேண்டும், வாடை வராமல் தடுக்க வேண்டும். மரப் பாலத்தில், பாலத்தை அடைத்து வைத்து இருக்கிறார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு ஒரு போலீஸ் அதிகாரி கூட இல்லை. காவல்துறை அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும். மழைத் தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது. மக்கள் கடுமையாக பாதித்து கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற பிரச்சனைகளை எல்லாம் சரி செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மக்களுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். லைசன்ஸ் இல்லாமல் இயங்கக் கூடிய மதுபான கடைகளை நிச்சயம் தடை செய்ய வேண்டும். உயிர்கள் போவதை தடுக்க வேண்டும். இவ்வாறு எஸ்.பி வேலுமணி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.