/tamil-ie/media/media_files/uploads/2017/11/maitreyan....jpg)
அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரேயன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 90% விசாரணை முடிவுற்ற நிலையில் , 2019 ஏப்ரலில் அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் ஆணையத்திற்கு எதிராக தடையாணை பெற்றது. இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தடை காரணமாக எதுவும் நடக்கவில்லை. இதற்காக கோடிக்கணக்கில் அரசுப்பணம் செலவிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று முடிவு வந்தால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் அளவற்ற மகிழ்ச்சி அடைவதோடு நிம்மதிப் பெருமூச்சும் விடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கச் செய்து, ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியாக 100 நாட்களில் ஜெயலலிதாவின் 5 ம் ஆண்டு நினைவுநாள் வருகிறது. அதற்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன் என்றும் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.