/tamil-ie/media/media_files/uploads/2018/09/3-14.jpg)
அதிமுக எம்எல்ஏ
அதிமுக எம் எல் ஏ ஈஸ்வரனின் திருமணம் இரண்டாவது முறையாக தடைப்பட்டு நின்றுள்ளது.
அதிமுக எம் எல் ஏ ஈஸ்வரன்:
பவானிசாகர் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு இன்று திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தனர்.
இந்த நிலையில் மணமகள் சந்தியா திடீரென மாயமானார். இதுகுறித்து சந்தியாவின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தியாவை தேடிய போலீசார் திருச்சியில் அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் தந்தை வயதுள்ள ஒருவரை திருமணம் செய்ய பிடிக்காமல் ஓடிப்போனதாக சந்தியா கூறினார். இதனையடுத்து சந்தியாவின் விருப்பம் இல்லாமல் அவருக்கு திருமணம் செய்ய கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்றும், அந்த தேதிக்குள் இன்னொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்யவுள்ளதாகவும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ கூறியிருந்தார். ஆனால் இன்று அவருக்கு நடக்கவிருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. ஈஸ்வரன் எம்.எல்.ஏவுக்கு பொருத்தமான பெண் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் திருமணம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.