காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை எதிர்த்து, அதிமுக எம்.பி முத்துகருப்பன் இன்று(2.4.18) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது போல் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கபடவில்லை. காவிரி மேலாண்மை அமைப்பதுக் குறித்து மத்திய அரசு தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதன்படி அதிமுக எம்பி முத்துகருப்பன் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய போவதாக இரண்டும் தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அ.தி.மு.க. எம்பி முத்துக்கருப்பன். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், கடந்த 30 ஆம் தேதி முத்துக்கருப்பன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இன்று(2.4.18) முத்துகருப்பன், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதன்படி, முத்துகருப்பன் இன்று தனது ராஜினாமா கடிதத்தை வெங்கையா நாயுடுவிற்கு அனுப்பி வைத்தார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால் மிகுந்த வேதனையுடன் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் கூறினார். செய்தியாளர்கள் மத்தியில் தனது ராஜினாமா கடிதத்தை வாசித்துக் காட்டிய முத்துகருப்பன், காவிரி நீர் பிரச்சனையில் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அரசியலுக்காக குடிக்க தணீர்க்கூடக் கொடுக்காமல் இருக்கலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதே போல் ராஜினாமா முடிவில் இருந்து எந்த ஒரு காரணத்திற்காகவும் பின் வாங்க போவதில்லை என்று முத்துகருப்பன் திட்டவட்டமாக தெரிவித்தார்.