மத்திய அரசின் டெல்லி நிர்வாக சேவைகள் திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை பேசினார்.
டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகளின் பதவிக்காலம், ஊதியம், இடமாற்றம் தொடர்பான பல்வேறு விவகாரங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது.
இதையும் படியுங்கள்: பட்டியலின மக்களுக்கு கொடுமைகள் தொடர்ந்தால், அ.தி.மு.க. வேடிக்கைப் பார்க்காது – இ.பி.எஸ் எச்சரிக்கை
டெல்லி மாநில அரசு அதிகாரிகளின் நியமனம், இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே இந்த அதிகாரத்தை தங்கள் வசம் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்காக டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2023-ஐ மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறும்பட்சத்தில் டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகளின் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசே மேற்கொள்ளும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 3 ஆம் தேதி இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் மக்களவையில் மசோதா நிறைவேறியது.
இந்நிலையில், இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது.
அப்போது அ.தி.மு.க சார்பில் பேசிய எம்.பி தம்பிதுரை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சரான நான், அமித் ஷா கொண்டு வந்த சட்டத்திருத்திற்கு அ.தி.மு.க சார்பில் முழு ஆதரவை வழங்குகிறேன். அரசியலமைப்புச் சட்டம் யூனியன் பிரதேசங்கள் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. மசோதாவை எதிர்க்கும் ப.சிதம்பரம் இந்த பக்கத்தில் இருந்தால் மசோதாவை ஆதரித்து வலுவான கருத்துக்களை வைக்கக் கூடிய வல்லமை உடையவர். கூட்டாட்சியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட மத்திய அரசுக்கே அதிக அதிகாரம். காங்கிரஸ் அரசு தான் கூட்டாட்சிக்கு எதிராக செயல்பட்டது. மாநில உரிமைகளை பறித்தது காங்கிரஸ் அரசு தான். எமர்ஜென்சியை நாடு மறக்காது. இவ்வாறு தம்பிதுரை பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil