ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலி சான்றிதழ் கொடுத்த ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்தாக யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்பதால் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை 3 முறை ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 25-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில் சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு ஜூன் 14-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
மேலும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக ஜூன் 22-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையின்போது உடனிருக்கவேண்டும் எனக்கூறி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கேட்டு ஜூலை 1-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று ( ஜூலை 6) உத்தரவிட்டார்.
இந்நிலையில் கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சிபிசிஐடி அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் - கோவை ரோடு என்.எஸ்.ஆர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட்மெண்டில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 2 டி.எஸ்.பி.,க்கள், 9 ஆய்வாளர்களைக் கொண்ட குழு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக நேற்று (ஜூலை 06) எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் யுவராஜின் மணல்மேடு தாளப்பட்டி வீட்டில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் 4 சிபிசிஐடி போலீஸார், பலத்த போலீஸார் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.
அத்துடன், தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரகு மற்றும் பத்திரப்பதிவின் போது சாட்சிக் கையெழுத்திட்ட முனியநாதனூரில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளிலும் சிபிசிஐடி போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் அவர் 25 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“