By: WebDesk
Updated: September 21, 2018, 09:24:49 AM
Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live
அதிமுக கண்டன பொதுக்கூட்டம் : சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றனர்.
வருகின்ற 25ம் தேதி அதிமுக கண்டன பொதுக்கூட்டம்
அப்போது, 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கு திமுக கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தான் காரணம் என குற்றம் சாட்டி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களின் தலைநகர்களிலும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு வருகின்ற 25ம் தேதி ஏற்பாடு செய்திருக்கிறது அதிமுக கட்சி.
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச “இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது அந்நாட்டு ராணுவத்திற்கு இந்தியா உதவி செய்தது” என சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு நேர்காணலில் பதில் அளித்ததை சுட்டிக் காட்டினார்.
யார் யார் எங்கே தலைமை ஏற்கிறார்கள்?
இந்த தீர்மானத்தின் படி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார். அதே போல் தேனியில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு ஓ. பன்னீர் செல்வமும், சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர் ஜெயக்குமாரும், திருவள்ளூர் மாவட்ட பொதுக்கூட்டத்திற்கு அவைத் தலைவர் மதுசூதனனும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் தலைமை வகிக்க உள்ளனர்.