தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோ தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ டேப் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதனை ஊடகவியலாளர் சவுக்கு சங்கரும் அண்ணாமலையும் அடுத்தடுத்து வெளியிட்டார்கள். இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையான நிலையில், இதற்கு விளக்கம் தெரிவித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், இது மோசடியாக தயார் செய்யப்பட்டது என குறிப்பிட்டார். இந்த சர்ச்சை முடிவடையாத நிலையில், அமைச்சர் பி.டி.ஆர் பேசியதாக மீண்டும் ஒரு டேப் அண்ணாமலையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: ஓயாத பி.டி.ஆர் சர்ச்சை: மீண்டும் ஒரு டேப் வெளியிட்ட அண்ணாமலை
இந்தநிலையில், பி.டி.ஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோ தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல், கடந்த நான்கு தினங்களுக்கு முன்பாகவும் இன்றும் தமிழக நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகவும் அந்த குரல் பதிவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் அவருடைய மைத்துனர் திரு. சபரீசன் அவர்களும் பெருமளவில் பணம் சேர்த்து விட்டதாகவும் அது கடந்த ஓராண்டில் மட்டும் 30 ஆயிரம் கோடியை தாண்டும் என்றும் அவர்களுடைய மூதாதையர்களை விட இவர்கள் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்றும் ஒரு குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் பெருவாரியாக பகிரப்பட்டு பெரும் விவாத பொருளாக இருந்து கொண்டிருக்கிறது.
அதை ஒட்டி இன்று மீண்டும் அந்த குரல் பதிவின் தொடர்ச்சியாக இருப்பதைப் போல ஒரு குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் பெருவாரியாக பகிரப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த விதமான கருத்தையும் தெரிவிக்காத சூழ்நிலையில், அதில் குற்றம் சுமத்தப்படும் நபர் தமிழகத்தினுடைய அமைச்சர், குற்றத்தை சொல்பவரும் தமிழக அரசாங்கத்தினுடைய ஒரு அமைச்சர், எனவே இதனுடைய உண்மை தன்மையை கண்டறிந்து இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய புலனாய்வு துறைக்கும், அதன் தென் மண்டல இயக்குனருக்கும், இயக்குனர் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் நான் புகார் மனுவை பதிவுத் தபாலில் அனுப்பி இருக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil