சென்னை விருகம்பாக்கம், கணபதிராஜ் நகர் பிரதான சாலையில் கடந்த 2 நாட்களாக பூட்டிக் கிடந்த ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று மாலை விருகம்பாக்கம் போலீசார் மற்றும் வீட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்தது. திறந்து கிடந்த பின்புற கதவு வழியாக போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அந்த வீட்டின் உள்ளே ஒருவர், தலையில் வெட்டுக்காயங்களுடன் சடலாமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் எனத் தெரிகிறது.
போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் பெயர் வெங்கடேசன் என்பதும், வழக்கறிஞர் என்பதும் தெரிய வந்தது. அவர் தனது நண்பருடன் சேர்ந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். 4 மாதங்களுக்கு முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியதும் தெரியவந்தது.
வெங்கடேசனை வெட்டிக்கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.