அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கிய நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. புழுதிக் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்கம்பங்கள் அறுந்து விழுந்தன. தேசிய மற்றும் சர்வதேச விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன. சாலைகளில் தண்ணீர் தேங்கியது மற்றும் பூந்தமல்லி அருகே பலத்த காற்றால் தியேட்டர் மேற்கூரை சரிந்தது என ஒரு நாளில் சூறைகாற்றுடன் பெய்த மழை திக்குமுக்காட செய்தது. இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
எழும்பூர், பெரம்பூர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, அண்ணாநகர், கோயம்பேடு, வேளச்சேரி, அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 11 மி.மீ., மீனம்பாக்கத்தில் 8 மி.மீ., மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை இன்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
பலத்த காற்றால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சிங்கப்பூர், மதுரை, திருச்சி, கோவை, பெங்களூரூ, சூரத் ஆகிய விமானங்கள் தரையிறங்க முடியாமல் 15 நிமிடங்களுக்கும் மேலாக வானத்தில் வட்டமடித்து பறந்தன. இதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மஸ்கட், இலங்கை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, சேலம் ஆகிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் 11 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 7 முதல் 10-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"திங்கள்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை குறையக் கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும்" என்று சென்னை வளாகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் பி.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் முற்றிலும் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு கிழக்கு மேற்கு காற்று இணைவு ஏற்பட்டு தமிழகத்துக்குள் புகுந்து ஆந்திர எல்லையோர மாவட்டம் வரை மழை பெய்யத் தொடங்கியது.
அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது.