பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த ஆணை பிறப்பித்துள்ளார்.
பசுமைப் புரட்சியின் தந்தை என்ற புகழுக்குரிய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 98.
இந்தியாவின் உணவுத் தேவையில் தன்னிறைவு அடையச் செய்ததில் பசுமைப் புரட்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பசுமைப் புரட்சிக்கு காரணமான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பசுமைப் புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வேளாண் அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த ஆணை பிறப்பித்துள்ளார்.
எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காக கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார். சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை சுவாமிநாதன் பெற்றுள்ளார்.
உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“