கோவை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு கொலை வழக்குகள் 40 சதவீதம் குறைந்து இருப்பதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா ஆகிய அமைப்புகளின் சார்பில் கோவை மாநகர காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களில் சிறப்பாக பணியாற்றிய 100 காவலர்களுக்கு விருது வழங்கும் விழா அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதி அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று காவல் துறையினருக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, இந்த நிகழ்வு காவலர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளிக்கும் நிகழ்ச்சி என்றார்.
தற்போது குற்றவாளிகள் செல்போன் பயன்படுத்துவதை விட்டுவிட்டு சமூக ஊடகங்கள் மற்றும் செல்போன் அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதால் குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தவாறு காவல் துறையில் பல்வேறு நுட்பங்களை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
சைபர் க்ரைம் பொருத்தவரை பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அவர்களை பிடிப்பதற்கு தனிப்படைகளை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி பிடிப்பதால் தாமதம் ஏற்படுவதாகவும் கூறியதுடன் சைபர் கிரைம் பொருத்தவரை 1030 என்ற எண்ணில் குற்றம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் பொதுமக்கள் புகார் அளித்தால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க எளிதாக இருக்கும் எனவும் அறிவுறுத்தினார்.
ட்ரோன் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பாதுகாப்பு கோணத்தில் பார்க்கும் பொழுது விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தபடி காவல்துறையினர் குற்றங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசின் உத்தரவின்படி காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிப்பதால் காவல்துறையினரின் பணிச்சுமை சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு காவல்துறையினருக்கு தனி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கோவையைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டிற்கு 30 முதல் 32 கொலைகள் என்றிருந்த நிலையில் இந்த ஆண்டு அது 40 சதவீதமாக குறைந்து 21 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல் கோவை மாநகரத்தில் போக்குவரத்தை சீரமைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் பலனாக விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும், ஆம்புலன்ஸ் செல்வதற்கான நேரம் கடந்த ஆண்டு 11.4 நிமிடங்களாக இருந்தது தற்போது 7.4 ஆக குறைந்துள்ளதாகவும் இதனால் ஒரு உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
கோவை மாநகரத்தில் போக்குவரத்து சிக்னல்கள் நீக்கப்பட்டு யு டர்ன் முறை அமல்படுத்திய பிறகு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் முக்கியமான பகுதிகளில் ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் முதற்கட்டமாக 110 கேமராக்கள் பொருத்தப்பட்டு இரண்டாம் கட்டமாக கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் சமூக வலைதளங்களில் பதிவிடும் வகையில் யாரேனும் செயல்பட்டால் சட்ட ஆலோசனையின் பேரில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அது தொடரும் என்றும் ஆணையர் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.