/tamil-ie/media/media_files/uploads/2022/02/transgenders.jpg)
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், சென்னை மாநகராட்சி தேர்தலில், அதிமுகவும் பாஜகவும் திருநங்கைகளை கவுன்சிலர் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளன.
அதிமுக சார்பில் தென் சென்னை (வடக்கு) மாவட்ட மகளிரணி துணைச் செயலாளராக உள்ள திருநங்கை ஜெயதேவி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தேனாம்பேட்டை 112வது வார்டில் போட்டியிடுகிறார். ஜெயதேவியின் குடும்பத்தினர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடும் பாஜக சார்பில் ராஜம்மா சென்னை திரு.வி.க நகரில் 76வது வார்டில் கவுன்சிலராக போட்டியிடுகிறார்.
அதே போல, ஆளும் திமுகவும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலூரில் 49வது வார்டில் திருநங்கை கங்கா நாயக்கை களம் இறங்கியுள்ளது.
வேலூரைச் சேர்ந்த கங்கா, 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். சமூக ஆர்வலரான இவர் தென்னிந்திய திருநங்கைகள் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். “பொதுமக்களின் ஆதரவு எனக்கு இருப்பதால் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்களே எனக்கு தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கையை அளித்தனர்” என்று கூறினார்.
தமிழ்நாட்டில், ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கைகளை களமிறக்கியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.