2026 தேர்தலில் பழனிசாமி தலைமை ஏற்றால் அ.தி.மு.க காணாமல் போகும், தி.மு.கவுக்கு மாற்று அ.தி.மு.கவாக இருக்க வேண்டும் என்ற கனவை பழனிசாமி சிதைத்துவிட்டதாக புகழேந்தி கூறினார்.
கள்ளக்குறிச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்;
மத்திய அரசு நடத்தும் யு.பி.எஸ்.சி தேர்வில் தந்தை பெரியார் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு கேள்வி கேட்டது வேண்டுமென்றே நாட்டில் பிரச்சனையை உருவாக்கி கலவரங்களைத் தூண்டும் முயற்சி என்று கருதுகிறேன். மதத்தின் பெயரால் அரசியல் செய்வது அயோத்தியாவிலேயே மக்களைத் தோற்கடித்தது.
ஆளுநரைப் பொறுத்தவரை, அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அவர் தொடர்ந்து நமது நலன்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஒ.பி.சி விவகாரம் உட்பட அனைத்தும் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படுபவை. உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் மத்திய அரசு அதை மதிக்காமல் செயல்படுகிறது. இரண்டு முறை அரசியல் சாசனத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பியும் அதைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் குடியரசுத் தலைவருக்கும் சேர்த்து கெடு விதித்தும், அதை வைத்ததால்தான் உச்ச நீதிமன்றம் அதே கையில் எடுத்து நிலுவையில் இருந்த 10 தீர்மானங்களையும் அவர்களே நிறைவேற்றும் நிலை ஏற்பட்டது.
அ.தி.மு.க., பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தது அநாகரிகமானது. கூட்டணியே இல்லை என்று பழனிசாமி பேசிவிட்டு, கட்சியின் ஆட்சிமன்றக் குழு, செயற்குழு, பொதுக்குழு எதையும் கலந்தாலோசிக்காமல் திடீரென அமித் ஷாவுடன் அமர்ந்தது ஒரு கேவலமான நிலைமை. இது ஒரு பிடியில் சிக்கியதன் விளைவு. மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. இ.பி.எஸ் இணைய மறுக்கிறார்.
ஓ.பி.எஸ், சசிகலா, எடப்பாடி பழனிசாமி மற்றும் மற்றொரு தலைவர் என அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் சிக்கிவிட்டனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சி, இப்போது பா.ஜ.கவின் கைக்கூலியாக மாறிவிட்டது. இதற்கு எதிராக நான் ஒருவனே நிற்கிறேன்.
நடிகர் விஜயின் அரசியல் வருகை அ.தி.மு.கவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் ஆதரவு அ.தி.மு.கவுக்கு சவாலாக இருக்கும். 2026 தேர்தலில் பழனிசாமி தலைமை ஏற்றால் அ.தி.மு.க காணாமல் போகும், தி.மு.கவுக்கு மாற்று அ.தி.மு.கவாக இருக்க வேண்டும் என்ற கனவை பழனிசாமி சிதைத்துவிட்டதாகவும் புகழேந்தி கூறினார்.