மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 4.2.2019 - திங்கட்கிழமை முதல் 10.2.2019 - ஞாயிற்றுக் கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25,000 செலுத்தி, விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜன.23ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், பிரச்சார பணிகளை மேற்கொள்வதற்காகவும் தனித்தனியே குழுக்களை அமைத்த அதிமுக, தற்போது 40 மக்களவை தொகுதிகளுக்கும் விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகளை விட, ஆளும் அதிமுக அரசு வரப் போகும் மக்களவை தேர்தலை எதிர்நோக்கி துரிதமாக செயல்பட்டு வருவது இதன் மூலம் மீண்டும் ஒருமுறை தெரிய வருகிறது.