/indian-express-tamil/media/media_files/2025/09/06/eps-ops-sengo-sasi-2025-09-06-19-47-10.jpg)
செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம்: ஓ.பி.எஸ், சசிகலா ரியாக்ஷன்
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார். இதற்கு பதிலடியாக செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். செங்கோட்டையன் மீதான நடவடிக்கையை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா விமர்சித்துள்ளார்.
பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம்: ஓ.பி.எஸ்
செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அ.தி.மு.க 2, 3 அணிகளாக பிரிந்ததில் இருந்து தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தோல்வியில் இருந்து விடுபட வேண்டுமென்றால் அதிமுக இணைய வேண்டும் என்பது தொண்டர்கள், பொதுமக்களின் மனநிலையாக உள்ளது. செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம்.
அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்தவர்கள் மீதுதான் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் எனக் கூறியவர்கள் மீது ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஒருபோதும் நடவடிக்கை எடுத்ததில்லை. செங்கோட்டையனின் விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
செங்கோட்டையன் நீக்கம் - சசிகலா கருத்து
செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல்: கட்சி நலனுக்கு உகந்தது இல்லை. அனைவரும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை எண்ணி பார்க்க வேண்டும். இணைய வேண்டும் என கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்களுக்கு நாம் என்ன பதில் கூறப்போகிறோம்? அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே செங்கோட்டையனின் எண்ணம் . யாராக இருந்தாலும் தாங்கள் செய்யும் தவறை திருத்திக்கொள்ள வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது. தி.மு.க.வை வலுவிழக்க செய்வதே இன்றைய இலக்காக இருக்க வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்.
காலம் பதில் சொல்லும் - செங்கோட்டையன் கருத்து
இதனிடையே, அ.தி.மு.க. கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த கே.ஏ.செங்கோட்டையன், ”அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் கட்சி ஒன்றிணைப்பு பற்றி பேசினேன். ஜனநாயக முறைப்படி, பொறுப்புகளில் இருந்து நீக்கும் முன்பு என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் என்னிடம் விளக்கம் கேட்காமலேயே எனது பதவியை பறித்துள்ளார்கள். என் மீதான நடவடிக்கைகளுக்கு காலம் பதில் சொல்லும்” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.