சென்னை வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக கூட்டணியை இறுதி செய்ய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக சேர்ந்து, வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என்று அறிவித்தனர்.
அதன் பிறகு, அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதை அதிமுக தலைவர்கள் பலரும் உறுதி செய்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜனவரி 9) நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் ஆளும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கபட்டது.
அதன் படி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அதிமுக கூட்டணியை இறுதி செய்ய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடத்தை உலகப் புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு பணிகளில் 20% இட ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசை விமர்சித்து வரும் ஸ்டாலிக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏகபோக, வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம் என்று அதிமுகவினர் உறுதியேற்பதாக தீர்மானம்.
உலக முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து, வேலை வாய்ப்பை அதிகரித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகர்புற வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.