அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ. பன்னீர் செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேடிசி பிரபாகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பன்னீர் செல்வம் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெறும். தேர்தல் நடத்துவதற்கு முன்பாக உறுப்பினர் படிவம் அளிக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். இதை எல்லாம் முடித்த பிறகுதான் அதிமுகவின் உயர் பதவிக்கு தேர்தல் நடைபெற வேண்டும்.
இவை எதுவும் செய்யாமல் பிக் பாக்கெட் அடிப்பது போன்று பதவியை பெற முயற்சிக்கிறார்கள். எதுவுமே முறைப்படி இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் இவரை விட சர்வாதிகார அரசியல்வாதி, யாரும் இருக்க முடியாது. எங்களை கட்சியிலிருந்து நீக்கும் தகுதி யாருக்கு இருக்கிறது. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான்.
கட்சி இந்த நிலைமையில் இருக்க யார் காரணம் என மக்களும், தொண்டர்களும் நன்கு அறிவார்கள், அதிமுகவை மீட்கும் பணியை வேகமாக செய்வோம். சர்வாதிகாரமாக தேர்தல் அறிவிப்பை அறிவித்துள்ளார்கள். தொண்டர்கள் கலங்க வேண்டாம் என்று கூறினார்.
மேலும் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், அதிமுக மிகப்பெரிய மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் தேர்தல் சட்டவிதிகளின் படி தான் நடைபெற வேண்டும். இவை அனைத்தும் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் உள்ளது. விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது, சட்ட விதிகளை மாற்றுவது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். இதை நாங்கள் கண்டிக்கிறோம். சட்ட ரீதியாக இதை எதிர்கொள்வோம்.மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார், என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“