/indian-express-tamil/media/media_files/2025/08/25/trichy-eps-2-2025-08-25-08-28-33.jpg)
'வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 2026 தேர்தல்'... முசிறியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
திருச்சி புறநகர் பகுதிகளான முசிறியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. மக்களுக்கான கட்சி என்றும், தி.மு.க. குடும்பத்துக்கான கட்சி என்றும் ஒப்பிட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் ஏற்றம் பெற்றார்கள். தி.மு.க.வில் ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை அடிமைப்படுத்துகிறார்கள். அ.தி.மு.க.வில் உழைத்தால் சாதாரண தொண்டன் கூட உச்ச பதவிக்கு வரமுடியும். ஆனால் தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே பதவிகளுக்கு வர முடியும்,” என அவர் கூறினார்.
தி.மு.க.வை வாரிசு அரசியல் என சாடல்
தி.மு.க.வில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் முக்கியப் பதவிகளை வகிப்பதாகவும், உள்ளூரிலும் அமைச்சர் நேரு தனது மகனை எம்.பி. ஆக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆனால், அ.தி.மு.க.வில் பெயிண்டர், டாஸ்மாக் ஊழியர் போன்ற சாதாரண தொண்டர்களுக்கும் எம்.எல்.ஏ. பதவி வழங்கப்பட்டதாகவும், அ.தி.மு.க. மதம், சாதி அடிப்படையில் செயல்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் ரகுபதியின் 'ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் முதல்வர்' என்ற கருத்தைக் குறிப்பிட்ட பழனிசாமி, “இந்த தேர்தலுடன் தி.மு.க.வின் கதை முடிந்துவிடும். குடும்ப அரசியல் ஸ்டாலினுடன் முடிவுக்கு வரும். அ.தி.மு.க.தான் ரகுபதிக்கு அடையாளம் கொடுத்தது,” என்று விமர்சித்தார்.
தி.மு.க. அரசின் மீது குற்றச்சாட்டுகள்
தி.மு.க. அரசு கடன் வாங்குவதில் சாதனை படைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். “ஐந்தாண்டுகளில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். 2021 வரை இருந்த மொத்த கடனை விட இது அதிகம். ஸ்டாலின் திறமையற்ற முதல்வர் என்பதற்கு இதுவே சான்று,” என்றார்.
தி.மு.க.வின் 525 தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றப்படவில்லை என்றும், 98% நிறைவேற்றப்பட்டுவிட்டதாக ஸ்டாலின் பொய் சொல்வதாகவும் பழனிசாமி கூறினார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்வி கடன் ரத்து, கேஸ் சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அ.தி.மு.க. திட்டங்களை பட்டியலிட்ட பழனிசாமி
அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட அவர், விவசாயக் கடன்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது, குடிமராமத்து திட்டம், 24 மணி நேர மும்முனை மின்சாரம், காவிரி நீர் பிரச்சனைக்கு உச்சநீதிமன்றத் தீர்வு, பசுமை வீடுகள், அம்மா மினி கிளினிக் போன்ற திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்ததாகத் தெரிவித்தார்.
அதேபோல், ஏழை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம் போன்ற திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இத்திட்டங்கள் மீண்டும் தொடரும் என உறுதியளித்தார். முசிறி பகுதியில் நிலுவையில் உள்ள தடுப்பணை, கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.
“முதல்வர் ஸ்டாலின் இப்போதுதான் 'உங்களுடன் ஸ்டாலின்' என மக்களிடம் வருகிறார். 46 பிரச்சனைகளைக் கண்டறிந்திருப்பதாகக் கூறுகிறார். இன்னும் 8 மாதங்களில் ஆட்சி முடியும் நிலையில், இந்த திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும்?” என அவர் கேள்வி எழுப்பினார். இறுதியாக, “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என முழக்கமிட்டு தனது உரையை முடித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.