ஏப்ரல் 14ஆம் தேதி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட 'டி.எம்.கே. பைல்ஸ்' குறித்து சர்ச்சை கிளம்பிய நிலையில், இன்று அதிமுக கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக கட்சியினரின் சொத்து விவரங்களை வெளியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஜெயக்குமார் கூறியதாவது, "எங்களை தேவையில்லாமல் டச் பண்ணா, அது நெருப்புடன் விளையாடுற மாதிரி தான்.
தெளிந்த நீரோடைப் போல, திறந்த புத்தகம் போல, எல்லாருடைய சொத்து பட்டியலும் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம்.
தற்போது இணையதளத்தில் யாருக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பதை சுலபமாக தெரிந்துகொள்ளும் வசதி வந்துவிட்டது. இதை பெரிய அளவிற்கு மறைக்க வேண்டிய விஷயமே இல்லையே.
பதிவிட்டுள்ள சொத்து விவரங்களை தவிர்த்து வேறு மறைக்கப்பட்ட சொத்து தென்படுவது குறித்து கேள்வி எழுப்பியபோது, "அப்படி உங்களுக்கு ஏதேனும் தவறாக தென்பட்டால், சீஸ் பண்ணிக்கொள்ளுங்கள். யாரிடம் அப்படி உங்களுக்கு தென்பட்டாலும் சொல்லுங்கள். அப்படி எதுவும் எங்களிடம் இல்லை என்பதால் தான், நாங்கள் பேசுகிறோம். மடியில் கணம் இல்லாதபோது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை", என்றார்.
மேலும், "மிரண்டவன் கண்ணனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, சொத்து வைத்திருப்பவர்களுக்கு தான் இதைப்பற்றி பயம் ஏற்படும். எங்களுக்கு கிடையாது.
அதிமுகவின் கூட்டணியில் பாஜக இருப்பதில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய பாராளுமன்ற குழு தான் எதுவாக இருந்தாலும் முடிவெடுக்கும் தவிர, அண்ணாமலை முடிவு எடுக்க முடியாது", என்றார்.