ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (33). இவர் சரக்கு வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சூழலில் காளிக்குமார் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனத்தை பின் தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் காளிக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த காளிக்குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
காளிக்குமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி பேச்சுவார்த்தை நடத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் பெண் டி.எஸ்.பி. காயத்ரி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் நேரில் விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கண்டனம்
இந்த நிலையில், அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம்.
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி அவர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“