Sasikala Use Aiadmk Flog : அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக அமைச்சர்கள் சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற வி.கே.சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் விடுதலைக்கு முன்பே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் மருத்துவமனையில் இருந்தபடியே விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு பின்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா கடந்த வாரம் டிஸ்ஜார்ச் செய்யப்பட்டார்.
சசிகலா விடுதலை செய்யப்பட்ட உடனேயே தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்புக்கு உள்ளான நிலையில், சசிகலா வருகை ஆளும் அதிமுகவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்படியாக மருத்துவமனையில இருந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி பறந்த காரில் பயணம் செய்தது அதிமுக அமைச்சர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.
அதிமுக மூத்த தலைவர் கே.பி முனுசமி, சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு .இல்லை. அவர் அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது. டிடிவி தினகரன் அதிமுகவிற்கு துரோகம் செய்துள்ளார். அவர் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கடிதம் கொடுத்தால், அவரை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய டிடிவி தினகரன் அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை உள்ளது. அவர்தான் அதிமுக பொதுச்செயலாளர். அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக தொடக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்திய குற்றத்திற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக மூத்த அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக இன்று சென்னை டிஜிபி அலுவலகம் சென்ற அதிமுக அமைச்சர்களுடன், மூத்த தலைவர்கள், கே.பி.முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு அளித்துள்ளனர். இது குறித்து அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில், 2017 நவம்பரில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகதான், உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது அதிமுகவுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என நீதிமன்றத்தில் மனு செய்து விலகி கொண்டவர் டிடிவி தினகரன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கே.பி முனுசாமி கூறுகையில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவிர மற்றவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது. ஆதலால் அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை. அவர் உறுப்பினராக இருந்தாலுமு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பது அதிமுக சட்ட விதி என்று தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர்களின் இந்த புகாரால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"