அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவின் சட்ட ஆலொசனைக் குழு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். திமுக அரசுக்கு எதிராகப் பேசுவோர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவின் சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், தளவாய்சுந்தரம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, பாபு முருகவேல் ஆகியோர் இன்று (டிசம்பர் 31) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.
ஆளுநரைச் சந்தித்தபின், அதிமுக சட்ட ஆலோசனைக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள், மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அச்சுறுத்தல்கள், அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அச்சுறுத்தல்கள், இளைய சமுதாயம், மாணவ சமுதாயங்களுக்கு போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கின்ற ஏற்பட்டிருக்கின்ற நிலை பற்றியும், ஆளும் திமுக, ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசை எதிர்த்து பேசுகின்றவர்கள் மீதும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுகின்றவர்கள் மீது போடப்படுகின்ற பொய் வழக்குகள் பற்றியும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். பொய் வழக்குகள் போடுவது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த வழக்குகளில் எந்தவிதமான சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல், ஸ்டாலின் தலைமையிலான காவல் துறை, திமுகவினுடைய தொண்டர்படையாக மாறியிருக்கிறது. ஆளுகின்ற ஸ்டாலின் அரசை எதிர்த்துக் கேள்விக் கேட்கின்ற, குறைகளை சுட்டிக்காட்டுகின்ற நபர்கள் மீது பொய் வழக்கைப் போடுவது மட்டுமில்லாமல், அந்த வழக்கு போடப்பட்டவர்கள் மீது, அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் மீதும் எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் காவல் துறை எல்லோரையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஆள் கடத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.” என்று குற்றம் சாட்டினார். மேலும், ராஜேந்திர பாலாஜி என்ன கொலையா செய்தார்? என்றும் அவரை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம் காண்பிக்கிறது தமிழ்நாடு அரசு” என்று கேள்வி எழுப்பினார்.
ஜனவரி 5ம் தேதி தமிழக சட்டப் பேரவை கூடுகின்ற நிலையில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக சட்ட ஆலோசனைக் குழு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”