கேரளா வெள்ள நிவாரணத்திற்கு அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்கவிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கேரளா வெள்ள நிவாரணத்திற்கு வழங்குவார்கள்’ என அறிவித்தார். இந்தத் தொகை சுமார் 2 கோடி ரூபாய் வரை சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு ரூ 5 கோடி நிதி உதவியை அறிவித்தது. தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு பால் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை நிவாரண உதவியாக வழங்கி வருகிறது.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்கள் சார்பில் ரூ 25 லட்சம் நிவாரண உதவி அறிவித்தனர். தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஷால், நடிகர் விக்ரம் ஆகியோரும் கேரளாவுக்கு நிதி உதவி அறிவித்திருக்கிறார்கள். விக்ரம் ரூ 35 லட்சம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் 15 லட்சம் அறிவித்தார். தென் இந்திய நடிகர் சங்கம் சார்பிலும் உதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. கேரளாவுக்கு வேறு எந்த மாநிலத்தையும் விட தமிழ்நாட்டில் இருந்து அதிக உதவிகள் போய்க் கொண்டிருக்கின்றன.
கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியத்தை கேரளாவுக்கு வழங்குவதாக கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், ‘பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை புதுப்பித்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
தண்ணீர் வடிந்தவுடன் பயிர் சேதம் கணக்கிடப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தரப்படும். கேரளாவுக்கு உணவு, உடை உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’ என்றார்.