/tamil-ie/media/media_files/uploads/2017/12/epsops.jpg)
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கூடியது. இதில் இபிஎஸ், ஓபிஎஸ் கலந்து கொண்டனர்.
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (பிப்ரவரி 2) மாலை 4.30 மணிக்கு சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் கூடியது. கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட வாரியாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என மைத்ரேயன் வைத்த விமர்சனம், ஆர்.கே.நகர் தோல்வி தொடர்பாக மதுசூதனன் எழுதிய கடிதம் ஆகியவை குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய நிர்வாகிகள் நியமனத்தில் ஓபிஎஸ் அணியினருக்கும் குறிப்பிடத்தக்க அளவில் இடம் ஒதுக்க இதில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக அமைப்பு ரீதியாக 50 மாவட்டங்களாக இருக்கிறது. இவற்றில் சற்றே பெரிய மாவட்டங்களை இரண்டாக பிரித்து ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.