பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன் பெயர் பரிசீலிக்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சட்டப்பேரவையில் நயினார் நாகேந்திரன் இருக்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது கவனம் பெற்றுள்ளது.
அ.தி.மு.க பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிசாமி அண்மையில், உள்துறை அமைசரும் பா.ஜ.க முக்கிய தலைவருமான அமித்ஷாவை சந்தித்தார். இதையடுத்து,
2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வெளியானது. பா.ஜ.க தேசியத் தலைமையும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இதனிடையே, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பா.ஜ.க தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழ்நாடு பா.ஜ.க-வில் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், சட்டப்பேரவை அரங்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர், நயினார் நாகேந்திரனின் இருக்கைக்கு சென்று 10 நிமிடம் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க மீண்டும் கூட்டணி அமைக்க பா.ஜ.க தலைமை முடிவு செய்துள்ள நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சந்தித்துப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.