அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 28-ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் இறுதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனது செல்லாது என்றும் அவர் நடத்திய பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லாது என்றும், கட்சி தலைமை பதவியை தொண்டர்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை பழனிசாமி மாற்றியது செல்லாது என ஓ.பி.எஸ், அ.தி.மு.க தொண்டர் ராம்குமார் ஆதித்யன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பாக சூரியமூர்த்தி, ராம்குமார் ஆதித்யன், ஓபிஎஸ், புகழேந்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திலும் மனு அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.
இதனிடையே, அ.தி.மு.க தொடர்பாக, தான் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சூரியமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், சூரியமூர்த்தி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அளித்த மனுக்கள் அனைத்தின் மீது விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. அதேநேரம், இவர்கள் யாரும் அ.தி.மு.க உறுப்பினர் இல்லை என்பதால், இவர்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில், பழனிசாமி, பன்னீர்செல்வம், பெங்களூரு புகழேந்தி, ராம்குமார் ஆதித்யன், சூரியமூர்த்தி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், அதிமுக விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை ஏப்ரல் 28-ம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடைபெறுகிறது. அதில் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இரட்டை இலை சின்னம், உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து அ.தி.மு.க, பொது செயலாளர் எடிப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் கட்சியில் பிளவுகள் உள்ளதா என திருப்தி அடைந்த பிறகே விசாரணையை தொடர வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யக்கோரி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர்அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை (17.04.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதம் குமார், ‘இரட்டை இலை சி்ன்னம் தொடர்பாக ஏப்ரல் 28-ம் தேதியன்று இறுதி விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவி்த்துள்ளது’ எனக்கூறி அதற்கான அறிவிப்பை தாக்கல் செய்தார். அதைப்பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.