Advertisment

முதல்வர் வேட்பாளர் முடிவில் இபிஎஸ் உறுதி: எம்.எல்.ஏ.க்களுக்கு அதிரடி அழைப்பு

AIADMK Tamil News: அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை நடத்தியே தீரவேண்டும் என்பதில் இபிஎஸ் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu news today live updates,

அதிமுக முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இனியும் தாமதிக்காமல் 7-ம் தேதி இதை அறிவித்தே ஆக வேண்டும் என்பதே முதல்வரின் நிலைப்பாடு. இதற்காக ஆதரவு திரட்டும் ஒரு நடவடிக்கையாக 6--ம் தேதியே சென்னைக்கு வந்துவிடும்படி எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற விவகாரம், அதிமுக.வில் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. கடந்த 28-ம் தேதி சென்னையில் அதிமுக செயற்குழுவில் இது குறித்து முடிவு எட்டப்பட வில்லை. செயற்குழு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து வெளியிடுவார்கள்’ என குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை நடத்தியே தீரவேண்டும் என்பதில் இபிஎஸ் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

இதன் அடுத்தகட்டமாக 6-ம் தேதியே சென்னைக்கு வந்துவிடும்படி அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமைக் கழகத்தில் இருந்து போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது வெளியிடப்படவில்லை.

அதிகாரபூர்வ அறிவிப்பு என்றால் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கையொப்பம் இட்டு அறிக்கை விடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டச் செயலாளர்களை அழைக்க வேண்டும் என்றாலும்கூட, இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து முடிவெடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களைப் பொறுத்தவரை, சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் இபிஎஸ் நேரடியாக அழைக்கலாம்.

அந்த அடிப்படையில் இபிஎஸ் தரப்பில் எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே அதிக ஆதரவு இருந்தது. அதேபோல எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு அதிகம். பெரும்பாலான அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமே மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். எனவே எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என்பது அடுத்த முதல்வர் வேட்பாளரை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

இதற்கிடையே ஓபிஎஸ், தனது சொந்த மாவட்டமான தேனிக்கு கிளம்புவதாக தகவல்கள் வருகின்றன. எனவே 7-ம் தேதி அவர் சென்னையில் இருப்பாரா? என்கிற கேள்விகளும் எழுகின்றன. அதிமுக புதிய புயலை சந்திக்க தயாராகி வருவதாகத் தெரிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Aiadmk O Panneerselvam Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment