க.சண்முகவடிவேல்
pudukottai | vijayabaskar: புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்நிலையத்துக்கு எதிரே ஐயங்கார் என்ற தேநீர் கடை இருக்கிறது. இந்தக் கடையில் அந்த வழியாக செல்லும் பெரும்பாலான வாகனங்களில் வருவோர் வாகனங்களை நிறுத்தி டீ அருந்தி செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓம் சக்தி கோயில் பக்தர்கள் 16 பேர் ராமேஸ்வரத்துக்கு வேனில் சென்றுகொண்டிருந்தவர்கள் அந்த தேநீர் கடையில் நிறுத்தி டீ அருந்த இறங்கிச்சென்றனர். அதேபோல், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து பிள்ளையார்பட்டி நோக்கி சென்ற ஐயப்ப பக்தர்கள் 22 பேர் ஒரு வேனில் அங்கு டீ குடிக்க வந்தனர்.
இதேபோல், திருக்கடையூரிலிருந்து ராமேஸ்வரத்துக்கு காரில் சென்ற 6 பேர் ஒரு குழுவாக தேநீர் கடையின் அருகே வாகனத்தை நிறுத்தி நள்ளிரவில் தேநீர் குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அரியலூரில் இருந்து சிவகங்கைக்கு சிமென்ட் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்றை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார். திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தேநீர் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தவர்கள் மீதும், சாலையோரம் நின்றிருந்த இரண்டு வேன், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, ஓம் சக்தி கோயில் பக்தரான வேனில் அமர்ந்திருந்த சாந்தி, தேநீர் அருந்தி கொண்டிருந்த ஓம் சக்தி கோயில் பக்தரான ஜெகனாதன், ஐயப்ப பக்தரான மதுரவயலைச் சேர்ந்த சுரேஷ், சென்னையைச் சேர்ந்த சதீஷ், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து நமணசமுத்திரம் காவல் நிலையத்திற்கு எதிரே நடந்ததால் இந்த விபத்து குறித்து உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணிகளை உடனே மேற்கொண்டு இடிபாடுகளில் சிக்கிய மேலும் 19 பேரை உடனடியாக மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
/indian-express-tamil/media/post_attachments/da3868c5-8ee.jpg)
அதேநேரம், இந்த விபத்து குறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தனது துயர செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விஜயபாஸ்கர் தனது சமூக வலைதள பதிவில், "இந்தக் காலை இப்படி விடிந்திருக்க வேண்டாம். புதுக்கோட்டை நமுணசமுத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்த செய்தி இதயத்தை நொறுங்கச் செய்தது. இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், 3 வயது சிறுமி உட்பட 19 பேர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து, எனது அறிவுறுத்தலின்பேரில் நமது நகர கழக செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மருத்துவமனை விரைந்து தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
படுகாயமடைந்தவர்களுக்கு உடனடியாக மேல் சிகிச்சைகளை வழங்குவதோடு, ஈடு செய்ய முடியாத இழப்பில் தவிக்கும் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் தயவுகூர்ந்து கவனமாக இருங்கள். ‘எவருடைய அலட்சியத்தாலும் அப்பாவி உயிர்கள் ஒருபோதும் பறிபோய்விடக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை அருகே டீ குடித்துக்கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதி 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“