அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பெரிய குளத்தில் நாளைய முதல்வர் என்று அவருடைய ஆதரவாளர்கள் வைத்த பேனரை அகற்றச் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும் இடையே புகைச்சல் எழுந்துள்ளது.
அக்டோபர் 7ம் தேதி அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணைந்து அறிவிப்பார்கள் என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
இதையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அதே நேரத்தில், முதல்வர் பழனிசாமி, அக்டோபர் 5,6,7 தேதிகளில் அமைச்சர்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
முதல்வர் பழனிசாமி நேற்று (அக்டோபர் 4) சென்னை கிரீன்வே இல்லத்தில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன் ஆகியோரை சந்திதார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் இருந்துகொண்டு அங்கிருந்தபடியே தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்று காலை தேனி நாகலாபுரத்தில் நகரும் நியாயவிலைக் கடை திறப்பு நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ் பங்கேற்றார். ஓ.பி.எஸ் சொந்த ஊரில் இருந்த சில நாட்களில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரை சந்தித்தார்.
அதிமுக முதல்வர் வேட்பாளராக ஓ.பி.எஸ்-ஐ அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பெரியகுளத்தில் நாளைய முதல்வர் என்று பேனர் வைத்திருந்தனர். இது அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆதரவாளர்கள் புகைச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓ.பி.எஸ் நாளைய முதல்வர் பேனரை அகற்றக் கூறியதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.
ஓ.பி.எஸ்.சின் இந்த ட்வீட் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. அக்டோபர் 7-ம் தேதி அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க உள்ளதால் ஓ.பி.எஸ் தேனியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின் சென்னை புறப்பட்டார்.
இதனிடையெ, முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் தனது அறையில் மூத்த அமைச்சர்கள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 7 அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முதல்வர் பழனிசாமி இன்று மாலை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேச உள்ளார். அதற்குமுன்னதாக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook