மதுரை தோப்பூரில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் தமிழகம் வந்து 5 இடங்களையும் ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய குழு ஒப்புதல் வழங்கியது. இதற்காக தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம், (17.12.18) தோப்பூரில் 1264 கோடி ரூபாய் செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதே போன்று தெலங்கானா மாநிலம் பிபிநகரிலும் 1028 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கியது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நன்றி தெரிவித்துள்ளார்.
அதே போல் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் மோடிக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி தெரிவிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையிலும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நட்டா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் 100 எம்பிபிஎஸ் இடங்களும், 60 பிஎஸ்சி நர்சிங் இடங்களும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதர்ம் மோடி மற்றும் ஜே.பி.நட்டாவுக்கும் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.