சென்னையில் இன்று அதிகாலை முதல் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக ஏராளமான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் அடர்த்தியான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். மேலும், வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரச் செய்தபடி வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்
பனிமூட்டத்தின் எதிரொலியாக சென்னையில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தரையிறங்க வேண்டிய 6 விமானங்கள், பெங்களூர், திருவனந்தபுரம் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன. விமான சேவை பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
விமான சேவையை போலவே, சென்னையின் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவினால் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் ரயில் பயணிகளும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த சூழலில் வடதமிழக பகுதிகளில் நாளையும் அடர்ந்த பனிமூட்டத்தை எதிர்பார்க்கலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.