/indian-express-tamil/media/media_files/2025/09/08/airport-moorthi-2025-09-08-07-31-55.jpg)
வி.சி.க.வினர் மீது தாக்குதல் நடத்திய புகாரில் ஏர்போர்ட் மூர்த்தி கைது
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக, புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது அக் கட்சியின் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது, பதிலுக்கு மூர்த்தி நடத்திய தாக்குதலில் விசிக நிர்வாகிகள் இருவர் காயமடைந்ததாகக் கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, சென்னை டி.ஜி.பி. அலுவலக வாசலில் வைத்து, கத்தியால் தாக்கியதாக மூர்த்தி மீது வழக்கு பதியப்பட்டு, அவரை மெரினா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம்
புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ‘ஏர்போர்ட்’ மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதனால், ஆத்திரமடைந்த விசிக-வினர், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் முன்பு நின்றிருந்த மூர்த்தியைச் சுற்றி வளைத்துத் தாக்கினர். அப்போது, மூர்த்தியும் பதில் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பரஸ்பர புகார்
இச்சம்பவத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மூர்த்தி, திருமாவளவன் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், வி.சி.க.-வினர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், மூர்த்தி பாக்கெட் கத்தியால் தாக்கியதில், தங்கள் கட்சியினர் இருவர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்குப்பதிவு மற்றும் கைது
இந்த பரஸ்பர புகார்களின் அடிப்படையில், விசிக நிர்வாகிகளை கத்தியால் தாக்கிய வழக்கில் ‘ஏர்போர்ட்’ மூர்த்தியை மெரினா காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல் மற்றும் கொடுங்காயம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரவு 10:30 மணியளவில் காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்று, மூர்த்தியைக் கைது செய்து, டி-5 மெரினா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் இருந்து சட்டப்படி உடல்நலப் பரிசோதனைக்காக அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் . அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் (BP) இயல்பைவிட குறைவாக இருந்ததால், மாத்திரை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மாத்திரை உட்கொண்ட பிறகு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் உட்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மூர்த்தி தற்போது ஸ்டான்லி மருத்துவமனையின் ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையின் முதல்வர் அறிவுறுத்தலின்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.