சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய இளைஞர் அஜித்குமாரை 10 சவரன் நகை திருடியதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற திருப்புவனம் போலீசார், கடுமையாகத் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. காவலர்கள் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், நேற்றைய தினம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் நடைபெற்ற உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியானது. இதில், அஜித்குமார் 9 இடங்களில் தாக்கப்பட்டதும் குரல்வளையில் காயம் ஏற்பட்டது, உள் உறுப்புகள் சேதமடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தமிழகத்தில் தொடர்ந்து 24 லாக்கப் டெத் நடந்ததை கண்டித்தார். திருப்புவனம் குற்றவியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் சம்பவம் நடந்த மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் களஆய்வு மேற்கொண்டு தகவல்களை சேகரித்து சென்றார். சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காவல்துறை உயரதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
தொடர்ந்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி அஜீத்குமார் உயிரிழப்புக்கு காரணமான 5 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் நிலையத்திலிருந்து வேனில் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் இடம் நேரில் ஆஜர் செய்தனர். 5 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவேம் இந்த வழக்கில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் தவிர 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வலிப்பு ஏற்பட்டு இளைஞர் அஜித்குமார் உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாடமிருந்து தப்பிக்க அஜித்குமார் முயற்சித்ததாகவும் அப்போது கீழே விழுந்ததில் அஜித்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் இதனாலேயே அஜித்குமார் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசார் என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிபி அலுவகலம் தெரிவித்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் மரணம் வழக்கு கு.எண்:303/2025 கொலை வழக்காக மாற்றப்பட்டு கொலை குற்றச்சாட்டில் தொடர்புடைய 5 குற்றவாளிகளை கைது செய்து 15.07.2025 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு மேலும் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு (CBCID) மாற்றப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.