பதிவுத் துறையில் வழிகாட்டி மதிப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களில் முரண்பாடுகள் உள்ளதை அரசு சரி செய்ய முத்தரப்பு குழு ஒன்றை உருவாக்க முன் வரவேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையம் வந்த அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஹென்றிக்கு தேசிய துணை தலைவர் செந்தில் குமார் தலைமையி்ல் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி கூறியதாவது; அங்கீகாரம் பெறாத பட்டா மனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பட்டா மனைகளை டி.டி.சி.பி அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு நன்றி.
மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமத்தின் ஹாக்கா பகுதிகளில் அமைந்துள்ள பட்டா மனைகளையும் வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் வழிவகை செய்ய அரசு முன் வரவேண்டும். பதிவுத்துறை அலுவலகங்களில்,பொதுமக்களுக்கு சரியான அடிப்படை வசதிகள் கூட இல்லை. பதிவுத்துறை அலுவலகங்களுக்கு வரும் பொது மக்கள் அலை கழிக்கப்படுகின்றனர்.
பொது அதிகார ஆவணத்திற்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அதே போல கடந்த பதிவு துறை மூலம் அறிவித்த கட்டாயம் மனை மற்றும் கட்டிடத்துடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவு பதிவு கட்டணம் எவ்வளவு இருந்தாலும் பொதுமக்கள் கட்டுவார்கள் என்ற தவறான பார்வையை பதிவு துறை கொண்டுள்ளது.
அரசின் பல்வேறு நிதி சுமைகளுக்கு பதிவு துறையை அரசு பயன்படுத்துகிறது. பதிவு துறையில் எல்லா இடங்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த உயர்வு பகுதிக்கு பகுதி முரண்பாடாக இருக்கிறது. இதற்கு தீர்வு காண அரசு முத்தரப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதில் ரியல் எஸ்டேட் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“