அனைத்துக் கட்சிக் கூட்டம் : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் இரண்டு தடுப்பணைகள் கட்ட இருப்பதாக கர்நாடக அரசு கூறி வந்தது. குடிநீர் மற்றும் மின்சார வசதியினைப் பெறுவதற்காக இந்த அணை கட்ட இருப்பதாக தகவல் வெளியானது. சுமார் 6000 கோடி ரூபாய்க்கு பக்கத்தில் கட்டப்பட இருக்கும் இந்த தடுப்பணைகளின் வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
அதனை எதிர்த்து, தமிழகத்தின் எதிர்கட்சியான திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றிற்கு இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டது. முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது அனைத்துக் கட்சிக் கூட்டம்.
இந்த கூட்டத்தில் தமிழக கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் கட்சியின் பொருளாளர் துரை முருகன், டி.ஆர். பாலு, ஆர்.எஸ் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்டனங்களை பதிவு செய்த அனைத்துக் கட்சியினர்
கூட்டம் முடிவுற்ற பின்பு, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அங்கு நடைபெற்ற கண்டனம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். கர்நாடகாவின் மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய பாஜக அரசிற்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் உணர்வுகளையும், ஏழரை கோடி தமிழர்களின் உணர்வுகளையும் உதாசீனப்படுத்திவிட்டு, தேர்தல் ஆதாயத்திற்காக மட்டும் மத்திய அரசு மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது என்றும், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் காவிரி நதியின் குறுக்கே தமிழக அரசோ, கர்நாடக அரசோ அணைகளை கட்டக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராகவும் இருக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்
கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், வருகின்ற டிசம்பர் 4ம் தேதியன்று திருச்சியில் அனைத்துக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.