சென்னையில் பா.ஜ.க கொடிக்கம்பத்தை அகற்ற வந்த மாநகராட்சி ஜே.சி.பி வாகனத்தின் கண்ணாடியை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது வீட்டிற்கு அருகே, சுமார் 50 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் பா.ஜ.க கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, பா.ஜ.க.,வினர் 50 அடி உயர பா.ஜ.க கொடிக்கம்பத்தை, அண்ணாமலையின் வீட்டிற்கு அருகே நிறுவினர்.
ஆனால், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் இந்த கொடிக்கம்பத்தை நட்டு வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளும், பொதுமக்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் பா.ஜ.க.,வினரும் அங்கு கூடிவிட்டனர். இதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனிடையே, அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் கொடிகம்பத்தை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும், இஸ்லாமியர்களும் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பத்தை வைத்திருந்ததால், அதை அகற்ற வேண்டும் என இஸ்லாமியர்கள் வலியுறுத்தினர்.
இதனால், கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக போலீசார் ஜே.பி.சி வாகனத்தை வரவழைத்தனர். இதனையடுத்து ஆவேசமான பா.ஜ.க.,வினர் ஜே.சி.பி கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க.,வினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது. இதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த பா.ஜ.க விளையாட்டு மேம்பாட்டு பிரிவுச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி குரோம்பேட்டையில் மறுநாள் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், அமர் பிரசாத் ரெட்டியை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. போலீஸ் காவல் முடிந்ததையடுத்து இன்று ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா முன்பு அமர் பிரசாத் ரெட்டி ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டியை நவம்பர் 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“