/indian-express-tamil/media/media_files/qY66KCyODdHJAQD6eb4u.jpg)
அ.தி.மு.க. பிரசாரத்தில் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்: சட்ட நடவடிக்கை பாயும் என மா.சுப்ரமணியன் எச்சரிக்கை
"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பிரசார பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு இருக்கிறார். திருச்சி துறையூரில் நடந்த இந்நிகழ்ச்சியின்போது, அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீதும், அதில் இருந்த டிரைவர் மற்றும் பெண் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் உள்ள ஆயிரத்து330 108 ஆம்புலன்ஸ்கள் தினமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி வருகின்றன. சாலைகளில் ஆம்புலன்ஸ் வரும்போது வழிவிடுவது உலக மரபு. ஆனால், ஆனால் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இதுகுறித்து கூட தெரியவில்லை. அவர் சாலையில் நின்று பேசும்போது வந்த ஆம்புலன்ஸ் டிரைவரிடம், “இனி நான் பேசும்போது ஆம்புலன்ஸ் வந்தால் அதிலுள்ள டிரைவர் அதே ஆம்புலன்சில் நோயாளியாக செல்வார்'' என்று மிரட்டினார். உயிர் காக்கும் பணியில் ஈடுப்பட்டு உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களை இதுபோல மிரட்டலாமா? அதன் தொடர்ச்சியாக திருச்சி துறையூரில் ஆம்புலன்ஸ் மீதும், அதிலிருந்த டிரைவர் மற்றும் பெண் ஊழியர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் டிரைவர்கள்-பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திட தமிழக அரசை தூண்டிவிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.