/indian-express-tamil/media/media_files/MDLQ2pFmdN839usrBzKR.jpeg)
கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக வாலிபர் உயிரிழந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் - கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி கோவை கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி மீனாட்சிபுரம், கோபாலபுரம், வீரப்ப கவுண்டனூர், நடுப்புனி, ஜமீன்காலியாபுரம், வடக்காடு, செம்மனாம்பதி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் மருத்துவ சுகாதார துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருவோரிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்த மாவட்ட சுகாதார அதிகாரி அருணா தகவலாக கூறியதாவது; கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதை அடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் நியமிக்கப்பட்ட சுகாதாரக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.