சென்னையில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வருகை தந்துள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்த அவர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுப்பதற்காக தங்கினார். தொடர்ந்து இன்று காலை 11.05 மணிக்கு ராஜ்பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு 11.25 மணிக்கு வருகிறார்.
அங்கு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.50 வரை நடக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து 2.05 மணிக்கு புறப்பட்டு
தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு 2.20 மணிக்கு வருகிறார். பிற்பகல் 3.25 மணி வரை அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தநிலையில், சென்னை வந்துள்ள அமித்ஷாவை இ.பி.எஸ் மற்றம் ஓ.பி.எஸ் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பிற்பகல் 2.30 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இதேபோல், எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்கும் நேரம் குறித்து தகவல் இல்லை. அமித்ஷா உடனான சந்திப்பின் போது ஒன்றுபட்ட அ.தி.மு.க குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இ.பி.எஸ் மற்றம் ஓ.பி.எஸ் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“