சனாதன தர்மம் குறித்து தி.மு.க இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் கருத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை கடுமையாக சாடினார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்து மதத்தின் போதனைகளான சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அதை டெங்கு, மலேரியா மற்றும் கோவிட்-19 போன்ற நோய்களுக்கு சமம் என்றும் உதயநிதி கூறியதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.
“கடந்த இரண்டு நாட்களாக இந்தியா கூட்டணியை நான் கவனித்து வருகிறேன். உங்களுக்கு <எதிர்க்கட்சி கூட்டணி> அதிகாரம் வேண்டுமா? ஆனால் அதற்காக எதையும் செய்வீர்களா? கடந்த இரண்டு நாட்களாக, நீங்கள் இந்த நாட்டின் பாரம்பரியம், இந்த நாட்டின் வரலாறு, சனாதன தர்மத்தை அவமதித்து வருகிறீர்கள்,” என்று ராஜஸ்தானின் துங்கர்பூரில் இருந்து ‘பரிவர்தன் யாத்திரையை’ தொடங்கி வைக்கும் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா கூறினார்.
இதையும் படியுங்கள்: உதயநிதியின் சனாதன ஒழிப்பு கருத்து: ‘இனப் படுகொலைக்கு அழைப்பு’ என பாஜக குற்றச்சாட்டு
"இந்தியா கூட்டணியின் இரண்டு முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தி.மு.க - நிதி அமைச்சரின் மகன் மற்றும் ஒரு முதல்வரின் மகன் - சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றன," என்று அமித் ஷா கூறினார்.
“திருப்திப்படுத்தவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும், இவர்கள் சனாதன தர்மத்தை அவமதித்துள்ளனர்,” என்று அமித் ஷா கூறினார்.
எதிர்க்கட்சிகள் தலைமையிலான கூட்டணி குறித்து தொடர்ந்து கிண்டல் செய்த அமித் ஷா, “இன்று, மோடி வெற்றி பெற்றால், சனாதன தர்மத்தின் ஆட்சி அமையும் என UPA அரசும், காங்கிரஸ் தலைவர்களும் கூறுகின்றனர். சனாதன தர்மம் மக்களின் இதயத்தை ஆளுகிறது, அதை யாராலும் அகற்ற முடியாது,” என்று கூறினார்.
முன்னதாக, தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி கூறியதாவது: டெங்கு, கொசு, மலேரியா, கொரோனா போன்றவற்றை நம்மால் எதிர்க்க முடியாது, அவற்றை ஒழிக்க வேண்டும். அதேபோல், சனாதன தர்மத்தை எதிர்ப்பதை விட, அதை ஒழிக்க வேண்டும்.
இந்தக் கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நாள் கழித்து, பா.ஜ.க தலைவர் அமித் மாளவியா கூறியது போல், "இனப்படுகொலைக்கு" தான் அழைப்பு விடுக்கவில்லை என்று உதயநிதி மறுத்தார், அதேநேரம், சனாதன தர்மம் "சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கிறது", எனவே “வேரோடு பிடுங்கப்பட வேண்டும்” என்ற தனது கூற்றில் உறுதியாக நின்றார்.
"எனது உரையின் முக்கியமான அம்சத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன்: கோவிட்-19, கொசுக்களால் பரவும் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவுவது போல், பல சமூக தீமைகளுக்கு சனாதன தர்மம் காரணம் என்று நான் நம்புகிறேன்," என்று உதயநிதி கூறினார்.
முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) ஐடி செல் தலைவர் அமித் மாளவியா, உதயநிதியின் கருத்துக்களுக்காக அவரை விமர்சித்தார், அமைச்சர் உதயநிதி "சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய" அழைப்பு விடுக்கிறார் என்று அமித் மாளவியா கூறினார்.
இருப்பினும், தி.மு.க இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சரவணன் அண்ணாதுரை, “உதயநிதி கூறியது திரிக்கப்பட்டுள்ளது” மற்றும் “சூழலுக்குப் புறம்பானது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“