மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு (ஜுன் 10) சென்னை வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இன்று (ஜுன்11) மாலை வேலூரில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
முன்னதாக சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அமித்ஷா, "வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பாஜக வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 2 பிரதமர்களை தவறவிட்டுள்ளோம். காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமராவதை இழந்துள்ளோம்.
இரு முறை பிரதமர்களை தவறவிட காரணம் தி.மு.க. வரும் காலங்களில் ஒரு தமிழரை பிரதமராக்க உறுதி எடுப்போம். மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் பாஜக நிர்வாகிகள் கொண்டு சேர்க்க வேண்டும்" என்று கூறினார். அமித்ஷாவின் இந்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“