கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற பாஜகவினருக்கான முக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளை குறித்து எவரும் தவறாக பேசக் கூடாது என கடுமையான எச்சரிக்கை வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க.,வின் தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைவரும் ஒருமித்த ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், அதன்மூலம் தமிழகத்தில் கட்சி வேரூன்றி வளர வேண்டும் என்பதே தனது நோக்கமாகும் எனவும் அமித் ஷா வலியுறுத்தினார்.
இதற்கு முன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உடன் தனிப்பட்ட சந்திப்பு நடத்தி ஆலோசனை மேற்கொண்ட அமித் ஷா, தற்போது நயினார் நாகேந்திரனுடனும் தனியாகச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும், கட்சி நலனுக்காக அனைத்து நிலை நிர்வாகிகளும் குழப்பமின்றி செயலில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.