மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மண்டல அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில், மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தின் படி, இருசக்கர வாகனம் வாங்க பெண்களுக்கு அரசு சார்பில் ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா இறந்த பிறகு, இந்த திட்டம், தமிழ அரசால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கையெழுத்திட்ட 5 முக்கிய திட்டங்களில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டமும் ஒன்று. இதன்படி, கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்த விண்ணப்பங்களை வாங்க பெண்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.
இந்த விண்ணப்பங்களை பெண்கள், பிப்ரவரி 6 ஆம் தேதி, மாலை 5 மணிக்குள், தங்கள் பகுதிகளில் உள்ள மண்டல அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டம் முழுமையாக பெண்களை சென்று அடைய வேண்டும் என்பதற்காக, மானிய விலையில் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டது. மேலும், 5 நாட்களுக்கு அவகாசம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட இந்த அவகாசம் இன்றுடன்(10.2.18) முடிவடைகிறது.
இன்று காலை முதலே, அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், தகுதியான விண்ணபங்களை தேர்வு செய்வதில் அதிகாரிகள் குழம்பி வருகின்றனர். வரும் 24-ஆம் தேதி, ஜெயலலிதா பிறந்தநாள் என்பதால், அதே நாளில் இந்த திட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.