![TTV Dinakaran Trichy](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/01/05/krBdnC3NLLFVvAUNW8QX.jpeg)
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன்; 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பணிகளை தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடப்பதாக தி.மு.க.,வின் கூட்டணி கட்சியை சேர்ந்த சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறிய கருத்து தான் தமிழகத்தில் உள்ள அனைவரின் கருத்தாக உள்ளது.
சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது. அதனால் தான் அனைத்து எதிர்கட்சிகளும் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டாலின் ஹிட்லர் போல் செயல்படுகிறார். எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். ஆனால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மற்ற கட்சிகள் போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள். இந்த போராட்டங்கள் எல்லாம் நாடகம் என்று தி.மு.க கூறுகிறது. அதற்கு காரணம், தி.மு.க.,வினர் கதை எழுதி நாடகம் நடத்தி வளர்ந்த கட்சி. தி.மு.க செய்வது தான் கபட நாடகம்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசாங்கமே இவ்வளவு தூரம் ஏன் அச்சமடைகிறது. ஞானசேகரன் தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பது முன்வைக்கப்படுகிறது. தி.மு.க.,வில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பலர் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கூலிப்படையினர் அதிகமாகி விட்டனர். போதை மருந்து பழக்கத்திற்கு ஆளானவர்கள் கூலிப்படையினராக மாறி 5ஆயிரம் 10ஆயிரத்துக்கும் கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அதை கடுமையாக தடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொன்ன முதல்வர், தற்போது கூலிப்படையினரை உருவாக்குவதற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறாரோ என்ற அச்சம் தமிழகம் முழுவதும் உள்ளது.
தமிழக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை என்பது ஒரு பக்கம், விலைவாசி உயர்வு என்பது ஒரு பக்கம் இருக்கும் நிலையில், தமிழகத்தில் தி.மு.க கட்டாயம் 200 தொகுதிகள் எல்லாம் ஜெயிக்க முடியாது. இந்த ஆட்சி அடுத்த முறை தொடராது.
தி.மு.க-வினர் மேடையில் வீர வசனம் பேசுவார்கள். அதே நேரத்தில் மறைமுகமாக பின் வாசல் வழியாக சென்று மத்திய அரசின் கதவை தட்டுவார்கள். இது தி.மு.க.,வின் ராஜதந்திரம். தி.மு.க.,வின் பித்தலாட்டங்கள் கட்டாயம் பலிக்காது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை நல்ல காவல்துறை அதிகாரிகளை வைத்து விசாரணை செய்யலாம். ஆனால் தி.மு.க விரும்புவது போல் விசாரணை நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது போன்று தமிழ்நாட்டில் இனி ஒரு சம்பவம் கூட நடக்கக்கூடாது.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையில் ஒன்றிணைய வேண்டும். இந்த ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய தி.மு.க.,வை, வெல்ல வேண்டும் என்றால் அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி தான் சரியான தீர்வாக இருக்கும். தி.மு.க.,வை வீழ்த்த அனைவரும் ஒரே கட்சியில் இருக்க வேண்டிய அவசியமில்லை. தி.மு.க.,வை மீண்டும் ஆட்சியில் அமர விடக்கூடாது என்று நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை கட்சியாக இருக்க கூடிய பா.ஜ.க வை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்று கொள்வார்கள். பா.ஜ.க.,வால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று கூறுவது தவறானது. 2019ல் பா.ஜ.க வாங்கிய வாக்கு, 2021 இல் வாங்கிய வாக்குகளை விட 2024ல் அதிகமாகி இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.,வும் வளர்ந்து வருகிறது, தேசிய ஜனநாயக கூட்டணியும் வலுப்பெற்று வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இரட்டை இலையை வைத்து கொண்டு அ.தி.மு.க-வை கபளிகரம் செய்துள்ளார். அவரிடம் இரட்டை இலை இருப்பதால் பலர் ஏமாந்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தன் சுயநலத்திற்காக அ.தி.மு.க.,வை வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார். பழனிச்சாமி இன்று வரை தப்பிக்க காரணம் தி.மு.க.,வுடன் கள்ள கூட்டணி வைத்திருப்பதால் தான். அவர் தனியாக போட்டியிட வேண்டும் என்று தீர்மானத்துடன் இருக்கிறார். 2026க்கு பிறகு கட்சி எப்படி இருந்தால் என்ன எப்படி போனால் என்ன என்ற மனநிலையோடு இருக்கிறார். இவ்வாறு டி.டி.வி தினகரன் கூறினார்.
இந்த சந்திப்பின் போது திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொட்டியம் ராஜசேகர், திருச்சி மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.