எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவோம் என்றும் தோல்வி பயத்தில் முதல்வர் முதல் ஆ.ராசா வரை எங்கள் கூட்டணி பற்றி பேசி வருகின்றனர் என்றும் சிவகங்கையில் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரம் பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அ.ம.மு.க பொது செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்க்ளை சந்தித்தார்.
அப்போது பேசிய டி.டி.வி தினகரன், “பா.ஜ.க – அ.தி.மு.க தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறிய கருத்து, இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பாரதிய ஜனதா கட்சி. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி, அம்மாவின் கட்சி தலைமையில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துவிட்டார். அவர் சொல்வது படிதான் கூட்டணி அமைந்துள்ளது. ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் தி.மு.கவை வீழ்த்துவதற்கு பலம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி பெற்றிருக்கிறோம்.
தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்று எந்தெந்த கட்சிகள் விரும்புகிறார்களோ அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.
மோடி, அமித்ஷா பார்த்து பயமில்லை என்று ஆ.ராசா கூறுவது, வருகின்ற தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தப் போகிறோம் என்ற பயத்தில் முதல்வர் முதல் அனைவரும் பேசி வருகின்றனர். ஆ.ராசா பற்றி பதில் சொல்லத் தேவையில்லை. மக்கள் விரோத தி.மு.க ஆட்சியை எங்களது கூட்டணி உறுதியாக வீழ்த்தி நல்லதொரு மக்களாட்சியை மக்கள் விரும்புகிற ஆட்சியை, எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக கொண்டு வருவோம்” என்று கூறினார்.